• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மூர்த்தியின் காரை மறித்த பெண்கள் பரபரப்பு புகார்..,

ByKalamegam Viswanathan

Jun 30, 2025

மதுரை தாராபட்டி கீழ மாத்தூர் துவரி மான் புதுக்குளம் ஆகிய பகுதிகளில் சாலை பணிகளுக்கான பூமி பூஜையில் கலந்து கொள்ள வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி வருகை தந்த நிலையில்
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராப்பட்டி கிராமத்தில் பூமி பூஜையில் கலந்து கொண்டு கிளம்பிய அமைச்சர் மூர்த்தியின் காரை வழிமறித்த பெண்கள் 4 அரை ஆண்டுகளாக நல்ல தண்ணீர் வரவில்லை, சாக்கடை வசதி செய்து தரவில்லை மற்றும் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

அமைச்சரின் காரை வழிமறித்து பெண்கள் கேள்வி கேட்ட நிலையில் காருக்குள் இருந்து பதிலளித்துக் கொண்டிருந்த அமைச்சர் மூர்த்தி சிறிது நேரம் கழித்து காரை விட்டு இறங்கினார் உடனே அமைச்சரை சூழ்ந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் எங்கள் பகுதியில் சாக்கடை வசதி செய்து தரவில்லை மழை பெய்தால் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது மேலும் நல்ல குடி தண்ணீர் கிடைத்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது இது குறித்து அதிகாரிகளிடத்தில் கூறினால் முறையான பதில் அளிப்பதில்லை மேலும் மகளிர் உரிமை தொகை பல பெண்களுக்கு கிடைக்கவில்லை உடனடியாக பெற்று தர வேண்டும் என சரமாரியாக கேள்வி கேட்டனர்.

உடனே அமைச்சர் அங்கிருந்த அதிகாரிகளை அழைத்த நிலையில் அதிகாரிகள் யாரும் அமைச்சரின் அருகில் வராததால் தொடர்ந்து அமைச்சரை பெண்கள் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தனர்.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அந்த இடத்தில் இருந்து புறப்பட்ட அமைச்சர் மூர்த்தி விரைவில் உங்களின் குறைகள் சரி செய்யப்படும் என கூறிச் சென்றார். மேலும் அமைச்சரின் வருகைக்காக காலை 9 மணியிலிருந்து 12 மணி வரை 100 நாள் வேலை பார்க்கும் வயதானவர்களை வரிசையில் நிற்க வைத்து வெயிலில் காக்க வைத்த கொடுமையும் அரங்கேறியது. 3 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த வயதான பெண்கள் மயக்கமடையும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மூன்று மணி நேரம் கழித்து அந்த அமைச்சரும் பொது மக்களின் குறைகளை சரிவர கேட்காமல் சென்றதால் அங்கிருந்து பெண்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிப்பிதுங்கி நின்றனர்.

அங்கிருந்த திமுகவினரும் அமைச்சரை வரவேற்று நிகழ்ச்சியை முடித்து அனுப்புவதில் குறியாக இருந்ததால் பொதுமக்கள் கூறிய புகார்களை கேட்பதற்கு கட்சியினருக்கும் அதிகாரிகளுக்கும் நேரமில்லாத நிலைமை ஏற்பட்டது. தொடர்ந்து மதுரை மேற்கு தொகுதியில் தொடர்ச்சியாக நலத்திட்டங்களில் பங்கெடுத்து வரும் அமைச்சர் மூர்த்தியை மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் முற்றுகையிட்டும் காரை வழிமறித்தும் கேள்வி கேட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று முன்தினம் கோவில் பாப்பாகுடிக்கு வருகை தந்த அமைச்சரை முற்றுகையிட்டு பெண்கள் கேள்வி கேட்ட நிலையில், இன்று அதே தொகுதிக்குட்பட்ட தாராப்பட்டி கிராமத்திலும் அமைச்சரின் காரை வழிமறித்து பெண்கள் சரமாரியாக கேள்வி கேட்டது பெரும் பரபரப்பையும் இந்த ஆட்சியின் கையாளாகாத தனத்தையும் காண்பிப்பதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.