தமிழக மின்வாரியம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதால் மின் கட்டணத்தை உயர்த்தலாமா? என்று ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தமிழக மின் வாரியத்துக்கு மின் கட்டணம் வாயிலாக 2021-22-ல் ரூ.72 ஆயிரத்து 96 கோடி வருவாய் கிடைத்தது. இதில் கடனுக்கான வட்டி, மின் கொள்முதல் என ரூ.83 ஆயிரத்து 310 கோடி செலவு ஆகிறது. இதனால் இந்த ஆண்டில் மட்டும் 11 ஆயிரத்து 213 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மின் வாரியம், 10 ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பை சந்தித்து வருவதால் கடன் மட்டும் ரூ.1.50 லட்சம் கோடியை தாண்டிவிட்டது.
இதன்படி 20 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இந்த நிலையில் தேசிய வங்கிகளிடம் மின் வாரியம் கடன் கேட்டு வருகிறது. ஆனால் நிதி நெருக்கடியை காரணம் காட்டி கடன் வழங்க இயலாது என்று வங்கிகள் கூறி வருகிறது. இதனால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய இக்கட்டான சூழலுக்கு மின் வாரியம் தள்ளப்பட்டுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தினால் மக்களின் விமர்சனங்களுக்கு ஆளாக நேரிடும் என்பதால் மின் கட்டணம் உயர்த்துவதை அரசு தள்ளி வைத்து வருகிறது .இந்நிலையில் தமிழகத்தில் மின் கட்டணம் உயருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.