• Sun. Apr 28th, 2024

சர்வதேச விமான நிலையமாக உருவாக்க உதவுவாரா ஸ்டாலின்? கோரிக்கை எழுப்பும் ஆர்.பி.உதயகுமார்..,

மதுரையில் தனது தந்தை பெயரில் நூலகம் திறக்க அக்கறை காட்டும் ஸ்டாலின், மதுரை விமான நிலையத்தை ,சர்வதேச விமான நிலையமாக உருவாக்க அக்கறை காட்ட வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை எழுப்பி உள்ளார்.

அப்படி என்ன கோரிக்கை சுவாரசியமாக எழுப்பி இருக்கிறார் என மேலும் விவரம் அறிய முன்னாள் அமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர். பி உதயகுமாரிடம் பேசினோம்..,

ஆர்.பி.உதயகுமார்

“மதுரை தொன்மையான நகரமாகும். 1962 ஆம் ஆண்டு உள்நாட்டுக்கு விமானசேவை தொடங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2013ஆம் ஆண்டு வெளிநாடுகளுக்கு விமான சேவை தொடங்கப்பட்டது . கோவை, விஜயவாடா, திருப்பதி , சீரடி, கண்ணூர் உள்ளிட்ட நகரங்களில் குறைந்த பயணிகளை கையாண்டு வந்தாலும் சர்வதேச நிலையமாக உள்ளது. அந்த அடிப்படையில் மதுரையை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என்று தென்மாவட்ட மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 24 நேரம் விமான சேவையாக மதுரை மாறி உள்ளது . ஆனால் பெரிய விமானங்கள் வந்து செல்லும் வகையில் ஓடுபாதையை விரிவாக்க செய்யப்படாமல் இருப்பதால், சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

 மதுரையில் விமான ஓடுதள பாதை 7,500 அடியாக உள்ளது இதனை கூடுதலாக 5,000 அடியாக அதிகரித்து, 12,500 அடியாக உயர்த்தினால் தான் சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க முடியும்.

எடப்பாடி பழனிச்சாமி

ஏற்கனவே மைசூர், வாரணாசியில் உள்ள அண்டர்பாஸ் திட்டம் அடிப்படையில் மதுரை விமான நிலையத்தை அண்டர்பாஸ் திட்டத்திற்கு, மத்திய அரசிடம் எடப்பாடியார் முதலமைச்சராக இருந்த போது அனுமதியை பெற்றார்.

 ஏனென்றால் 500 மீட்டர் நீளம் தேவைப்படுகிறது, இதில் ரிங் ரோடு அருகே விரிவாக்கம் செய்தால், ஏழு கிலோமீட்டர் சுற்றி ரிங்ரோடு சாலை அமையும் நிலை இருக்கும், இதன் மூலம் நில எடுப்பில் கிராம மக்கள் சிரமப்படுவார்கள். அதனால் அண்டர் பாஸ் அமைத்தால், மக்களுக்கு எந்த சிரமம் இருக்காது. ரிங் ரோடு பகுதியில் ஓடுதளம் அமைத்தால் 166 கோடி ரூபாய் தேவைப்படும், ஆனால் அண்டர் பாஸ் திட்டத்திற்கு 200 கோடி தேவைப்படும், கூடுதல் செலவு என்றாலும் மக்களுக்கு இந்த பாதிப்பு இருக்காது.

இதற்காக எடப்பாடியார் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் கூட்டத்தில் நடத்தி அனுமதி பெற்றார். தற்போது எடப்பாடியார் பெற்ற தந்த அனுமதியை பயன்படுத்த முதலமைச்சர் தயங்குவது ஏன்? திமுக இந்த திட்டத்தை கிடப்பில் போட்டது ஏன்? சர்வதேச அளவில் நிலையத்தை முதலமைச்சர் அக்கரை செலுத்தாதது ஏன்?

ஸ்டாலின்

ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எடப்பாடியார் 225 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி தந்தார். அதே போல் 11 மருத்துவக் கல்லூரிக்கு இடம் ஒதுக்கி தந்தார்.     6 புதிய மாவட்டத்திற்கு இடம் ஒதுக்கி தந்தார் .தற்போது சர்வதேச விமான நிலையத்திற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுத்தால் தொழில் வளம் பெருகும். தற்போது மதுரையில் டைட்டில் பார்க் அறிவித்து தற்போது அந்த இடம் பிரச்சினையாக உள்ளது.

மதுரையில் கலைஞர் நூலகம் அறிவித்துவிட்டு, விரைவாக திறப்பு விழா நடத்தும் முதலமைச்சர், மதுரையில் சர்வதேச விமான நிலையத்திற்கு அக்கறை காட்ட உறுதி எடுப்பாரா?

 மத்திய அரசிடம் மோதல் கடைபிடித்து தமிழகத்தில் வளர்ச்சி திட்டங்களைத் கிடைக்கவில்லை. மேலூரில் சிப்காட் தொழிற்சாலை அறிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. ஆனால் கருணாநிதிக்கு  கடலில் 81 கோடியில் பேனா சிலை வைக்க அக்கறை காட்டுகிறார்.ஆகவே தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

எது எப்படியோ மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறினால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *