அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23-ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் அதிமுகவில் ஒற்றை தலைமை குறித்து ஓபிஎஸ்.இபிஎஸ் இருவரும் தனித்தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர். மேலும்பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்ற இருவருக்கும் இடையே பலத்த போட்டி நிலவுகிறது.
இதற்கிடையே, “அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என 2 தலைமை பொறுப்பு தவறானது. கட்சியில் பொதுச்செயலாளர் பதவி மட்டும் தான் அதிமுகவின் உண்மையான தலைமையாக இருக்க வேண்டும். இதனால், அவர்கள் பொதுக்குழுவை கூட்டுவதற்கான அதிகாரம் கிடையாது.
பொதுக்குழு குறித்து அவைத்தலைவர் அறிவிப்பை ரத்து செய்து இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி, திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து, பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரிய சூரிய மூர்த்தியின் வழக்கை நிராகரிக்க வேண்டும் என, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று(16-ம் தேதி) விசாரணைக்கு வந்த போது, பொதுக்குழுவை நடத்துவதற்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம், அதிமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து பதிலளிக்க வேண்டும் என சூரிய மூர்த்திக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் 22-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.23ம் தேதி பொதுக்குழு நடக்க வுள்ள நிலையில் நீதிமன்றம் 22 ம் தேதி விசாரணையை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.