ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு 4 ஆண்டுகள் மட்டுமே பணி வழங்கப்படும், அதன்பின் கருணைத்தொகை, ஓய்வூதிய பலன்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் புதிய ஆள்சேர்ப்பு முறையை அறிவித்த மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிஹாரில் நடந்த போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சரான் மாவட்டம் சப்ரா எனும் பகுதியில் பயணிகள் ரயில் பெட்டிக்கு தீவைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலம் முழுவதுமே சாலை மறியல் நடைபெறுகிறது. அரா, பாகல்பூர், அர்வால், பக்சார், கயா, மூங்கர், நவாடா, சஹர்சா, சிவான் மற்றும் அவுரங்காபாத் மாவட்டங்களில் போராட்டம் வலுத்துள்ளது.
பிஹாரின் பக்சார் மாவட்டத்தில் ரயில் நிலையத்தில் திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பாட்னா நோக்கிச் செல்ல வேண்டிய ஜன் சதாப்தி ரயில் 30 நிமிடங்கள் தாமதமாக பயணித்தது.
பிஹாரில் 8 மாவட்டங்களில் பதற்றமான சூழல் நிலவுகிறது. டெல்லி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா மாநிலங்களிலும் போராட்டம் பரவியுள்ளது.