தமிழகத்தில் நடக்கும் சர்வதிகார ஆட்சியை மக்கள் தூக்கி எரியும் காலம் நெருங்கி விட்டது என்று விருதுநகரில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
அதிமுக நிறுவன தலைவர், தமிழக முன்னாள் முதலமைச்சர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் விருதுநகா் மேற்கு மாவட்ட கழகம், விருதுநகர் சட்ட மன்ற தொகுதி கழகம் சார்பாக விருதுநகரில் பாண்டியன் நகர் எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது. மாவட்ட கழக அமைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமரன் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பாடிய வசனங்கள் எல்லாம் இன்றும் வாழ்க்கையின் நடைமுறையாக உள்ளது. அவர் சொன்னது எல்லாம் வேதவாக்காக உள்ளது. புரட்சித்தலைவர் சொன்னதெல்லாம் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. திமுக ஒரு தீய சக்தி என்று புரட்சித்தலைவர் அன்றே சொன்னார் அது தற்போது நடந்து கொண்டிருக்கின்றது. இன்றைக்கும் திமுக அவர்களது குடும்பத்தை மட்டும்தான் பார்க்கின்றனர். மக்களை பற்றி யோசிக்கவே இல்லை.
ஏமாற்றிய பிழைக்கும் கூட்டம் திமுக கூட்டம். பொய் சொல்லியே ஓட்டு வாங்கி விட்டனர். இரண்டு வருடங்கள் கூட ஆகாத நிலையில் எல்லா விலையும் ஏற்றி விட்டனர். ஏண்டா இந்த ஆட்சி வர விட்டோம் என்று மக்கள் நினைக்கின்றனர். கூடிய விலைவாசியை கட்டுப்படுத்த தமிழக முதல்வரால் முடியவில்லை. அரிசி, பருப்பு, சிமெண்ட், செங்கல், மண்ணு விலை விட கூடிவிட்டது.
அதிமுக ஆட்சி மீது எடப்பாடியார் ஆட்சி மீது மக்கள் மத்தியில் எந்தவித அதிப்தியும் கிடையாது. எங்களுடைய அலட்சியத்தில் தான் நாங்கள் ஆட்சியை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதை பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு வந்துவிட்டது. திமுகவை மக்கள் எப்போதும் விரும்பி ஆட்சி கட்டில் அமர வைப்பது கிடையாது. அதிமுகவில் எப்பொழுதெல்லாம் பிரச்சனை வருகின்றதோ அப்போதெல்லாம் அதை பயன்படுத்தி திமுக ஆட்சிக்கு வந்து விடுகின்றது. தமிழகத்தில் தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நமது விருதுநகர் மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தது நாங்கள், அடிக்கல் விழாவில் எங்களது பெயர் இருக்கும், திறப்பு விழாவில் திமுகவினர் பெயர் இருக்கும். நாங்கள் முழுவதும் கஷ்டப்பட்டு களை எடுத்து தண்ணி ஊத்துறது செடியை திமுகவினர் சத்தம் போடாமல் அறுத்துவிட்டு சென்று விட்டனர்.
திமுக ஆட்சிக்கு வந்தால் என்னை கைது செய்வார்கள் என்று தெரியும். நான் அந்த அளவுக்கு திமுகவை கடுமையாக விமர்சித்து பேசி உள்ளேன். அதனால் என்னை ஜெயிலில் போட நினைத்து போட்டு விட்டனர். தற்போது சுப்ரீம் கோர்ட் ஜாமினில் வெளியே வந்துள்ளேன். திமுகவின் அடாவடி அராஜக போக்கு மூலம் அதிமுகவை எந்த காலத்திலும் அழிக்க முடியாது. நாளைக்கு இதே நிலைமை உங்களுக்கு திரும்பாதா என்று நினைத்து பார்க்க வேண்டும். நிலைமை எப்போது வேண்டுமென்றால் மாறலாம். திமுக கட்சி யாரையாவது வாழ வைத்ததாக வரலாறு கிடையாது. திமுக அரசு மக்கள் திட்டங்களை செயல்படுத்தாமல் போட்டோ சூட்டிங்கிலதான் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். . வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரவுள்ளது. மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். ஒரு நாள் நீங்கள் செய்யும் தவறு ஐந்து ஆண்டுகள் நீங்கள் அனுபவிக்க வேண்டி உள்ளது. மக்கள் அதிமுகவுக்கு எப்போதுமே வாக்களிக்க வேண்டும் என்று பேசினார்.
கூட்ட ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் விருதுநகர் சட்டமன்றத் தொகுதி கழகம் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.