தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், சிவில்சப்ளை கார்ப்பரேஷன், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான போனஸ் வழங்கக் கோரி சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் செயல்படக் கூடிய தொழிற்சங்கங்கள் அந்தந்த நிர்வாகங்களிடம் கோரிக்கை அளித்துள்ளன. வருகிற 24-ந்தேதி தீபாவளி பண்டிகையாகும். தீபாவளி பண்டிகைக்கு 12 நாட்களே உள்ள நிலையில் இதுவரை எந்த நிர்வாகமும் தொழிற்சங்கங்களை அழைத்து பேசவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறை பணியாளர்களுக்கு கடந்த ஆண்டு வழங்கியதை போன்று இந்த ஆண்டும் 20 சதவீத போனஸ் வழங்கலாமா? என்று அரசு ஆலோசித்து வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் அரசாணை வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.