மேட்டூர் அணை நடப்பாண்டில் 2 வது முறையாக நிரம்பியது. கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ண ராஜசாகர் அணைகளில் இருந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
ஒகேனக்கல் காவிரியில் வரும் தண்ணீர் அப்படியே மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை வினாடிக்கு 20 ஆயிரத்து 626 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை மேலும் அதிகரித்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே இன்று அதிகாலை 3.30 மணி அளவில் மேட்டூர் அணையின் உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியது. இதனால் நடப்பாண்டில் மேட்டூர் அணை 2-வது முறையாக நிரம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.