• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

திருப்பதியில் ஜூன் 30 வரை வி.ஐ.பி. தரிசனம் ரத்து

Byவிஷா

May 25, 2024

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வரும் ஜூன் 30-ஆம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வி.ஜ.பி. தரிசனம் ரத்து செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் தினமும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்கள், விசேஷ நாட்கள், மற்றும் திருவிழா போன்ற நேரங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது. மேலும், கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் திருமலைக்கு அதிக அளவில் வருகை புரிந்து வருகின்றனர்.
இதனையொட்டி திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 20 ஆயிரம் பேருக்கு ரூ. 300 சிறப்பு தரிசன டோக்கன்களை ஆன்லைனில் விற்பனை செய்ததுடன் தினமும் 20 ஆயிரம் இலவச டிக்கெட்டுகளையும் வழங்கி வந்தது. ஆனாலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் திருப்பதியில் இன்று காலை வரை இலவச தரிசனத்துக்கு அனுமதி கிடையாது என திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் வரும் ஜூன் 30-ம் தேதி வரை வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் வி.ஜ.பி. தரிசனம் ரத்து செய்யப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மேலும், எந்தவித பரிந்துரைக் கடிதங்களும் ஏற்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.