மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அருகில் அமைந்துள்ளது பழமை வாய்ந்த மாதாந்த சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்., இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான இந்த கோவில் ஆந்தங்கரைப்பட்டி கிராமத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ளது.

ஆத்தங்கரைப்பட்டி கிராம மக்கள் இக் கோவிலுக்கு வழிபாடு மற்றும் திருமணங்கள் செய்து கொள்ள வரும் போது அங்கு உள்ள பூசாரி பாகுபாடுகள் பார்த்து பூஜைகள் செய்வதாக குற்றம் சாட்டியும், எழுமலை மாதாந்த சுப்பிரமணிய சுவாமி என்ற பெயரை, ஆத்தங்கரைப்பட்டி மாதாந்த சுப்பிரமணய சுவாமி கோவில் என பெயர் மாற்றம் செய்ய கோரி ஆத்தங்கரைப்பட்டி கிராம மக்கள் கோவில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே பாரம்பரியமாக இருந்து வந்த பெயரையும், பூசாரியையும் மாற்றக் கூடாது என எழுமலை கிராம மக்கள் எழுமலை காவல் நிலையம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது.

இரு தரப்பு கிராம மக்களுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் சூழலில், இந்த சம்பவம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளது பரபரப்பை அதிகரித்துள்ளது.




