சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், விஜய் மக்கள் இயக்கத் தொண்டர்கள் களத்தில் இறங்கி, மக்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இயற்கையை மனிதனால் வெல்ல முடியாது என்பதை ஒவ்வொரு வருடமும் மழைக்காலம் உணர்த்தி வருகிறது. இருப்பினும் இதற்கான ஒரு முழு தீர்வு எட்டப்படாமல் இருப்பது வேதனைக்குரியது. வெள்ளத்தால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தரைத்தளம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளதால் பல இடங்களில் மக்கள் மொட்டை மாடிகளில் அகதிகள் போன்று வசித்து வரும் நிலை உள்ளது. அவர்களை மீட்பு குழுவினர் விரைவாக மீட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்டோருக்கு உணவு வழங்குவதற்காக ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். மக்களுக்கு அங்காங்கே அத்தியாவசிய தேவைகளை மருந்துகள், போர்வைகள், பால், உணவு போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நடிகர் விஜய்யின் “விஜய் மக்கள் இயக்கம்” உறுப்பினர்கள் தற்போது களத்தில் இறங்கி பாதிக்கப்பட்டோருக்கு உணவுகள் வழங்கி வருகின்றனர். செங்கல்பட்டு பகுதியில் இடுப்பளவு தண்ணீரில் நின்றுகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமானத்தோடு உணவு வழங்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
நேற்று தளபதி விஜய் தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் வெள்ளத்தினால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டிருந்தார். கண்டனத்தோடு மட்டும் நின்று விடாமல் மக்களுக்கு உதவியும் செய்து வருவது பல தரப்பினராலும் பாராட்டப்பட்டு வருகிறது.