• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கொரோனா பரிசோதனைக்கு கட்டாயப்படுத்தும் வீடியோ.. சீனாவில் அரங்கேறும் கொடுமை..

Byகாயத்ரி

May 5, 2022

சீனாவின் வூகானில் தோன்றிய கொரோனா தற்போது வரை குறைந்தபாடில்லை. ஷாங்காய் நகரில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியதை அடுத்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளதோடு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வீட்டை விட்டு வெளியே வர முடியாததால் ஏராளமானோர் உணவு, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இன்றித் தவிப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

பெய்ஜிங் நகரிலும் கொரோனா தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், கொரோனா பரிசோதனைக்காக பொதுமக்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கொரோனா பரிசோதனைக்காக ஒரு பெண்ணைத் தரையில் படுக்க வைத்து அவரது கை, கால்களை ஒருவர் பிடித்துக் கொள்ள கவச உடை அணிந்த நபர், அப்பெண்ணில் வாய், மூக்கில் இருந்து வலுக்கட்டாயமாக மாதிரிகளை சேகரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ எந்த நகரத்தில் எடுக்கப்பட்டதென்ற தகவல் தெரியவில்லை.

இதேபோல், சீன சுகாதாரப் பணியாளர்கள் கடந்த மாதம் ஒரு முதியவரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து கொரோனா பரிசோதனை செய்தது, சீன சமூக வலைதளமான வெபிபோ(Weibo)-வில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.