தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை என்றால் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கியது மட்டும்தான் என்று முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார்.
சிவகாசி வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் மாபெரும் பொதுக்கூட்டம் சிவகாசி அருகே ஆனைக் குட்டம் எம்ஜிஆர் திடலில் நடைபெற்றது. அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும்போது,
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளாக திமுக ஆட்சி நடைபெற்று வருகின்றது. விடியல் வரும் என்று சொல்லி மக்களை ஏமாற்றி வாக்குகளை கேட்டார்கள். இதுவரை விடியல் வரவில்லை. இதுவரைக்கும் திமுக ஆட்சியிலே இந்த பகுதி மட்டும் உள்ள தமிழகத்தில் எந்த பகுதிக்கும் எந்த திட்டமும் கொண்டு வரப்படவில்லை. அண்ணா திமுக ஆட்சியில் அம்மாவுடைய ஆட்சியில் எடப்பாடியார் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் மூடுவிழா நடத்துகின்ற வேலையில் தான் திமுக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது.
தாலிக்கு தங்கம் அற்புதமான திட்டம், திருமண உதவித்தொகை இப்படி எல்லா திட்டத்தையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. வேற எந்த சாதனையும் திமுக அரசு செய்யவில்லை. அண்ணா திமுக ஆட்சியில் எடப்பாடியார் காலத்தில்தான் தமிழகத்தில் 11 மெடிக்கல் கல்லூரி கொண்டு வரப்பட்டது. அதில் விருதுநகர் மெயின் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் விருதுநகர் மெடிக்கல் கல்லூரி அமைந்துள்ளது. சுமார் 355 கோடியில் இந்த அரசு மெடிக்கல் கல்லூரியை நாங்கள்தான் கொண்டு வந்தோம். நாங்கள் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்த திட்டத்தை அவர்கள் திறந்து வைத்துள்ளனர்.
திமுக அரசு வந்தவுடன் எழுதாத பேனாவுக்கு 80 கோடியில் சிலை வைக்கவும் தனது மகன் உதயாநிதி ஸ்டாலினை அமைச்சராக்கியதும்தான் திமுக அரசு செய்த சாதனை. இதைத் தாண்டி திமுக எதையும் செய்யவில்லை. 80 கோடியில் பேனா வைப்பதிற்க்கு பதிலாக அந்த நிதியில் அனைத்து அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கும் எழுதுகின்ற பேனாவை வழங்க வேண்டும். பேனா வைக்க வேண்டும் என்று நினைத்தால் கருணாநிதி நினைவிடத்தில் வைத்து கொள்ளுங்கள். ஈரோட்டில் ஆளுங்கட்சியின் அத்துமீரலால் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்றார். ஈரோட்டில் அண்ணா திமுக வேட்பாளர் 45 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார் என்று சொன்னால் அதே மிகப்பெரிய வெற்றி தான். அண்ணா திமுகவிற்கு வாக்களிப்பது யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு ஈரோடு இடைத் தேர்தல் ஒரு எடுத்துக்காட்டாகும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. அந்த தேர்தலில் அனைத்து வாக்காளர்களையும் இவர்கள் கூண்டுக்குள் வைத்து அடைக்க முடியுமா. இதை எல்லாம் மாற வேண்டும் என்று சொன்னால் உங்களுக்காக உழைக்கின்ற அதிமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும்.
வருங்காலங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.