ஆலந்தூர் அருகே மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சென்னையை அடுத்த பரங்கிமலை- கிண்டி இடையே ஆலந்தூர் பச்சையம்மன் ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் நடந்து சென்ற 2 பேர் மீது தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயில் மோதியது. இதில் 2 பேரும் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த மாம்பலம் ரயில்வே போலீசார், உயிரிழந்த 2 பேரின் உடலைகளைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன் பின் நடைபெற்ற விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள், கிண்டி செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்த சந்துரு(20) என்பதும். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்ததும் தெரிய வந்தது. மற்றொருவர் கிண்டியைச் சேர்ந்த நரேஷ்(23) என்பதும், அவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்து குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.