வரலாறு காணாத மழை வெள்ளம் காரணமாக, கடந்த 3 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை – தூத்துக்குடி விமான சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக குமரிக்கடல் பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வரலாறு காணாத மழை பெய்துள்ளது.
இதனால் கடந்த 2 நாட்களாக பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. ரயில் சேவைகள், விமான சேவைகள், ஆம்னி பேருந்துகள் ரத்து செய்யப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு தீவாக காட்சியளிக்கின்றன. எங்கும் போய்வர முடியாத அளவிற்கு துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசித்து வரும் மக்கள், சத்துணவு மையங்கள், ஆரம்ப சுகாதார மையங்கள், பள்ளிகளில் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 3 நாட்களுக்கு பின் தூத்துக்குடிக்கு விமான சேவை தொடங்கியுள்ளது.