• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இன்று நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழரின் நினைவு நாள்

ByKalamegam Viswanathan

Apr 7, 2023

நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழக உயிர் இயற்பியல் அறிஞர் கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் நினைவு நாள் (ஏப்ரல் 7, 2001).

கோபாலசமுத்திரம் நாராயண இராமச்சந்திரன் (G. N. Ramachandran) அக்டோபர் 8, 1922ல் திருநெல்வெலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் ஜி.ஆர்.நாராயணன், லக்ஷ்மி அம்மாள் ஆகியோரின் மூத்த மகனாகப் பிறந்தார். படித்தது எர்ணாகுளத்தில், இவர் தந்தை நாராயணன் எர்ணாகுளத்தில் கல்லூரியில் கணிதப் பேராசிரியராக பணியாற்றினார். திருச்சி புனித வளனார் கல்லூரியில் இயற்பியல்(ஹானர்ஸ்) படித்தார். பின்னர் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக சேர்ந்தார். சர்.சி.வி. இராமனின் கண்காணிப்பின் கீழ் ஆய்வு மேற்கொண்ட இராமச்சந்திரன் முனைவர் பட்டம் பெற்றார்.

கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்திலுள்ள சர் வில்லியம் இலாரன்ஸ் பிராகின் (Bragg) ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு பணிமுடிவடைந்ததும் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் உதவிப் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக அப்போது இருந்த இலட்சுமணசாமி முதலியார், இராமச்சந்திரனை அழைத்துவந்து 1952ல் சென்னை பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் பேராசிரியராக ஆக்கினார். இத்துறையின் கீழ் படிகவியல்லும் உயிர் இயற்பியல் என்னும் புதிய துறையை முன்னணி ஆய்வு வசதிகளுடன் இராமச்சந்திரன் எற்படுத்தினார். சென்னை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பொறுப்பேற்றபோது இராமச்சந்திரனுக்கு வயது 29. நாட்டின் மிகச்சிறந்த ஆய்வு நிலையங்களில் ஒன்றாக இராமச்சந்திரன் உருவாக்கிய படிகவியல்லும் உயிர் இயற்பியல் ஆய்வு நிலையம் உள்ளது. மனித உடலில் உற்பத்தியாகும் புரோட்டின் பொருளான காலஜினின் (collagen) உயிரணு எப்படி உருவாகிறது என்பதை கண்டறிந்தார். ஊடுகதிர் பற்றி ஆய்வினை இயற்பியல் முறையில் ஆய்வு மேற்கொண்டார். இம்முறைக்கு இராமச்சந்திரன் கோட் என்றே அழைக்கப்படுகிறது. காலஜினில் உள்ள மூலக்கூறுகள் முக்கோணக்கூட்டமைப்பில் உள்ளது என்ற உண்மையை வெளியிட்டார். கருக்காடிப் புரதக்கூறுகளின் (பெப்டைடுகளின்) கட்டமைப்பை அறிய உதவும் இராமச்சந்திரன் வரைபடம் என்ற கண்டுபிடிப்புக்காக அவர் போற்றப்படுகிறார். நோபல் பரிசு பெற இவர் பெயர் பரிந்துரைக்கப்பட்டது.

உயிரியலிலும் இயற்பியலிலும் முக்கியக் ஆய்வுகளை நிகழ்த்தியவர். குறிப்பாக, மூலக்கூறு உயிரியற்பியலில் புரதங்களின் கட்டமைப்புப் பற்றிய அறிதல்கள். இவரது கண்டுபிடிப்பான தசைநார்ப் புரதத்தின் மூற்றை எழுச்சுருள் வடிவம், புரதக்கூறுகளின் வடிவமைப்பை அடிப்படையாக அறிந்து கொள்ள உதவியது. மிகப்பெரிய அறிவியலாளராக இருந்தும், மிக எளிமையான சொற்களையும் எடுத்துக்காட்டுகளையும் கையாண்டு இவர் ஆற்றிய உரைகள், பள்ளி மாணவர்களுக்குக் கூட புரியும் வண்ணம் இருந்தது. இவர் ஒரு மிகச் சிறந்த ஆசிரியராக இருந்தார்.

1977ல் லண்டனில் உள்ள ஃபெலோ ஆஃப் ராயல் சொசைட்டி விருது பெற்றார். கிரிஸ்டலோகராஃபி துறையில் இவர் ஆற்றிய பணிக்காக ‘இவால்டு’ விருது பெற்றார். மேகநாத் விருது, பட்நாகர் விருது, வாட்மூல் நினைவுப்பரிசு என பல விருதுகள் பெற்றார். இருபதாம் நூற்றாண்டு இந்திய அறிவியலாளர்களுள் முக்கியமான நாராயண இராமச்சந்திரன் ஏப்ரல் 7, 2001ல் தனது 78வது அகவையில் சென்னையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி