• Mon. Apr 21st, 2025

சான்றிதழ்களை பதிவேற்ற இன்றே கடைசி நாள்..!

ByA.Tamilselvan

Jul 29, 2022

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கு இன்று கடைசி நாள் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவைகளில், இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம், ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன.
இந்த ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 14-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20-ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது.
இதில், மொத்தம் 2 லட்சத்து 11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 1.69 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், 1.58 லட்சம் பேர் தங்கள் அசல் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர்.
இந்த நிலையில், ‘மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றவும் இன்றுடன் (29-ம் தேதி) கால அவகாசம் முடிவடைகிறது. எனவே, மாணவர்கள் சான்றிதழ்களை இன்றே பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.tneaonline.org என்ற இணையத்தில் அறிந்து கொள்ளலாம் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.