• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இன்று சர் வில்லியம் அண்டர் மெக்கிரியா நினைவு நாள்

ByKalamegam Viswanathan

Apr 25, 2023

சூரியனின் முக்கால் பகுதி நீரகத்தால் ஆனது எனவும் எஞ்சிய கால்பகுதி எல்லியத்தால் ஆனது எனவும் கண்டுபிடித்த ஆங்கிலேய வானியலாளர், கணிதவியலாளர் சர் வில்லியம் அண்டர் மெக்கிரியா நினைவு நாள் இன்று (ஏப்ரல் 25, 1999).
சர் வில்லியம் அண்டர் மெக்கிரியா (Sir William Hunter McCrea) டிசம்பர் 13, 1904ல் டப்லினில் பிறந்தார். இவரது குடும்பம் 1905ல் கெண்ட் நகருக்குச் சென்றது. பிறகு டெர்பிசயருக்குச் சென்றது. இவர் அங்கு செசுட்டர்பீல்டு இலக்கணப் பள்ளியில் சேர்ந்தார். இவரது தந்தையார் டெர்பிசயரின் சுடாவ்லியில் உள்ள நெதெர்தோர்ப் இலக்கணப் பள்ளியின் ஆசிரியர் ஆவார். 1923ல் கேம்பிரிட்ஜ் டிரினிட்டி கல்லூரியில் சேர்ந்து பயின்றார். இங்கு கணிதவியல் கற்றார். 1929ல் இரால்ப் எச். பவுலரின் கீழ் முனைவர் பட்டம் பெற்றார். இவர் பின்னர் 1929ல் எடின்பர்கு பல்கலைக்கழகத்தின் கணிதவியல் விரிவுரையாளர் ஆனார். இலண்டன் இம்பீரியல் கல்லூரியிலும் உயர்விரிவுரையாளராகவும் உதவிப் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். 1936ல் பெல்பாசுட்டு அரசி பல்கலைக்கழகத்தில் கணிதவியல் துறையின் தலைவரானார்.
போரில் பணியாற்றிய பிறகு, 1944ல் அரசு ஆல்லோவே கல்லூரியில் கணிதவியல் துறையில் சேர்ந்தார். 1965ல் சூசெக்சு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறைசார்ந்த வானியல் மையத்தை உருவாக்கினார். 1928ல் ஆல்பிரெக்ட் அன்சோல்டுவின் கருதுகோளைப் படித்துவிட்டு சூரியனின் முக்கால் பகுதி நீரகத்தால் ஆனது எனவும், எஞ்சிய கால்பகுதி எல்லியத்தால் ஆனது எனவும், 1% மட்டும் பிற தனிமங்களால் ஆனது எனவும் கண்டுபிடித்தார். இதற்கு முன்பு அனைவரும் சூரியன் இரும்பாலானது என நம்பியிருந்தனர். இதற்குப் பின்னர், அனைத்து விண்மீன்களிலும் நீரகம் உள்ளதை உணரலாயினர்.
மெக்கிரியா 1964ல் விண்மீன்களின் நீலத் தோற்றத்துக்கு உரிய விளக்கமாக பொருண்மை பரிமாற்ற இயங்குமுறையை முன்மொழிந்தார். 1961 முதல் 1963 வரை அரசு வானியல் கழகத்தின் தலைவராக இருந்தார். இவர் 1965 முதல் 1966 வரை பிரித்தானிய அறிவியல் மேம்பாட்டுக் கழகத்தின் ஏ பிரிவுக்குத் தலைவராக விளங்கினார். 1985ல் வீரர் பட்டம் பெற்றார். 1976ல் அரசு வானியல் கழகப் பொற்பதக்கத்தைப் பெற்றார். சர் வில்லியம் அண்டர் மெக்கிரியா ஏப்ரல் 25, 1999ல் தனது 94வது அகவையில் இலெவெசுவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். அரசு ஆல்லோவே வளாக மெக்கிரியா கட்டிடம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.