• Sun. Jun 4th, 2023

இன்று இயற்பியலாளர், கிறிஸ்டியான் ஹைகன்ஸ் பிறந்த தினம்

ByKalamegam Viswanathan

Apr 14, 2023

ஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சியில் பங்கேற்ற கணிதவியலாளர், இயற்பியலாளர், கிறிஸ்டியான் ஹைகன்ஸ் பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 14, 1629).
கிறிஸ்டியான் ஹைகன்ஸ் (Christiaan Huygens) ஏப்ரல் 14, 1629ல் நெதர்லாந்தில் டென் ஹாக் நகரில் பிறந்தார். லைடன் பல்கலைக்கழகத்தில் சட்டம், மற்றும் கணிதம் படித்தார். அதன் பின்னரே அறிவியல் படிக்க ஆரம்பித்தார். ஹைஜன்ஸ் தொலைநோக்கியின் கண்வில்லையைக் கண்டறிந்தார். அதனைக் கொண்டு வான்பொருள்களை நுட்பமாக ஆய்வு செய்தார். இன்றளவும் விலை குறைந்த தொலை நோக்கிகளில் பயன்படுத்தப்படும் எளிய கண்வில்லை ஹைஜன்ஸ் வடிவமைத்ததே ஆகும். ஒளியானது அலைகளாகப் பரவுகிறது என்ற அலைக் கொள்கை காரணமாக உலக அளவில் அவர்பால் கவனம் ஈர்க்கப்பட்டது. ஹைகன்ஸ் கூறிய கருத்து, ஒளியானது துகள் (particle) மற்றும் அலை (wave) என இருமைப் பண்பு கொண்டது என்ற அலை-துகள் இரட்டைத்தன்மையைப் பின்னர் விளக்க உதவியது. “ஓர் அலை முகப்பின் ஒவ்வொரு புள்ளியும் இரண்டாம் கட்ட சிற்றலைகளின் ஆரம்பப் புள்ளியாகக் கருதலாம். இப்படித் தோன்றும் இரண்டாம் கட்டச் சிற்றலைகள் அனைத்துத் திசைகளிலும் சீராக முதல் அலையின் வேகத்திலேயெ பயணிக்கும்” என்பது ஹைஜென்ஸின் புகழ் பெற்ற கண்டுபிடிப்பாகும். இதனை ஹைஜன்ஸ் தத்துவம் என்று அழைக்கிறார்கள்.


1655ம் ஆண்டில் சனிக் கோளின் மிகப் பெரிய துணைக்கோளான டைட்டானைக் கண்டுபிடித்தார். புதன் கோளை விட பெரியதான இது சூரியக் குடும்பத்தின் துணைக்கோள்களில் மிகப்பெரிய துணைக்கோளாகும். இதற்கு முன் பெரிய துணைக்கோளாக வியாழனின் “கானிமீட்” இருந்தது. அத்துடன் சனிக் கோளின் வளையங்களை ஆராய்ந்து அவை சிறு சிறு பாறைகளினால் ஆனவை என்பதை 1656ல் கண்டறிந்தார். அமெரிக்காவின் நாசா நிறுவனம் அனுப்பிய டைட்டன் பற்றிய வானவியல் ஆய்வுக்கான இறங்கு கலனிற்கு டைட்டனைக் கண்டறிந்த ஹைஜன்ஸின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. புவியின் வளி மண்டலம் பல இலட்சக்கணக்காண ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்ததோ அது போல அடர்ந்த வளிமண்டலத்தைக் கொண்ட டைட்டனை ஆய்வு செய்ய இக்கலம் அனுப்பப்பட்டுள்ளது.
ஹைஜன்ஸ் 1659ம் ஆண்டில் ஓரியோன் என்ற தொலை விண்மீன் தொகுதியை (Nebula) ஆய்வு செய்து அதன் மாதிரிப் படத்தையும் வரைந்தார். ஓரியான் தொகுதியின் முதல் வரைபடமாக விளங்குவது இவரது ஓவியமே ஆகும். அவரது தொலைக்காட்டியின் மூலம் ஓரியான் வாயுத்திரளின் வேறுபட்ட பகுதிகளைப் பிரித்துக் குறிப்பிட்டு அதனைக் குறித்த தெளிவான விளக்கங்களை 17ம் நூற்றாண்டிலேயே வகுத்துக் கொடுத்தார். இப்பணியைப் போற்றும் விதமாக ஓரியோன் திரளின் ஒளிமிக்க நடுப்பகுதிக்கு இவரது நினைவாக “ஹைஜன்ஸ் பகுதி” எனப் பெயரிடப்பட்டது. காலத்தைக் கண்டறிய உதவும் ஊசல் கடிகாரத்தைக் கண்டு பிடித்தவரும் ஹைஜன்ஸ் தான். நெகிழக்கூடிய ஒரே ஆதாரத்தில் கட்டப் படக்கூடிய இரு ஊசல் குண்டுகளில் ஒன்றை மட்டும் இயக்கினாலும் அந்த இயக்கம் அடுத்த ஊசல் குண்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு ஒத்த அதிர்வும், எதிர் அதிர்வும் மாறி மாறி நிகழ்வதையும் இவர் கண்டுபிடித்தார். பரிவதிர்வு ஊசல் என்ற இது இன்றும் அறிவியல் மையங்களில் காணப்படுகிறது.
ஐசாக் நியூட்டனின் இரண்டாம் இயக்க விதியை இருபடிச் சமன்பாடாக மாற்றி எழுதியவரும் இவரே. இலாய்சி பாஸ்கலின் வேண்டுகோளுக்கிணங்க நிகழ்தகவுத் தத்துவம் குறித்த ஒரு நூலை எழுதி 1657ம் ஆண்டில் வெளியிட்டார். தற்காலத் தொகையீட்டு மற்றும் வகையீட்டு நுண்கணித வளர்ச்சிக்கு இவரது பங்களிப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அலைக் கொள்கை மூலம் உலக அறிவியல் புரட்சியில் பங்கேற்ற கிறிஸ்டியான் ஹைகன்ஸ் ஜூலை 08, 1695ல் தனது 66வது அகவையில் ஹேக், டச்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *