



பங்குனி உத்திர தேர்த் திருவிழாவில் தென் கைலாயம் என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தென் கயிலாயம் எனப்படும், வெள்ளியங்கிரி மலைத் தொடரின் அடிவாரத்தில், பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது.


இக்கோவிலில், பங்குனி உத்திர தேர்த் திருவிழா கடந்த, 6 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும் வேள்வி பூஜைகளும், திருவீதி உலாவும் நடந்தது. வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயாருக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. நடராஜர் அபிஷேகம் மற்றும் தரிசன காட்சி நடந்தது. தொடர்ந்து நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில், வெள்ளியங்கிரி ஆண்டவர், மனோன்மணி தாயார் எழுந்தருளினர். பின்னர் தேர் வடம் பிடித்தல் நடந்தது. பேரூர் ஆதினம் மருதாசல அடிகளார், திருத்தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தார்.
‘வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு அரோகரா’ என்ற கோஷத்துடன், பக்தர்கள், கோவிலை சுற்றி தேரை வடம் பிடித்து இழுத்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

