தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது
தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, தலைமை தேர்தல் ஆணையர் தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த ஆவணங்களை படித்த நீதிபதிகள், 18-ந்தேதி நாங்கள் வழக்கை விசாரிக்கிறோம் என்றனர். அதே நாளில் அவருடைய பெயரை பிரதமர் பரிந்துரைக்கிறார். ஏன் இந்த விஷயத்தில் இவ்வளவு அவசரம்?
மே 15-ந்தேதி முதல் நவம்பர் 18-ந்தேதி வரை நீங்கள் என்ன செய்தீர்கள் என எங்களுக்குக் காட்ட முடியுமா? ஒரே நாளில் அதிவிரைவாக இந்த நியமனத்தை ஏன் செய்தீர்கள்? என கேள்வி எழுப்பினர். அதேபோல தேர்தல் ஆணைய பதவிக்காக பரிந்துரைக்கப்பட்ட நான்கு பேரில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடிய நபர் தான் மிகவும் இளையவர். அப்படி இருக்கும் பொழுது அவரை எப்படி தேர்ந்தெடுத்தீர்கள் என்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம் என நீதிபதிகள் கூறினர்.
மேலும் தலைமை ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுபவரின் பதவி காலம் ஆறு ஆண்டுகள் என நீங்கள் சொல்கிறீர்கள். தேர்தல் ஆணையர்களில் யார் மூத்தவரோ அவரே தலைமை தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றும் சொல்கிறீர்கள். ஆனால் விரைவாகவே ஓய்வுபெற போகும் நபர்களை தேர்தல் ஆணையர் பதவிக்கு தேர்ந்தெடுக்கிறீர்கள். இது ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இருக்கிறதே? என நீதிபதிகள் சந்தேகத்தை எழுப்பினர்.