தமிழக அரசியலில் இதுவரை எந்தவொரு முதல்வரும் செய்யாத பல விஷயங்களை முன்னெடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின். அந்த வகையில் பொதுமக்களை நேரடியாக சந்திப்பது. அப்படி அதிகாலை வேளையில் சைக்கிளிங் செல்வது, நடைபயிற்சி செய்வது என்று உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருவதுடன் பொது மக்களையும் சந்திக்கிறார்.
சென்னை அடையார் தியாசபிகல் பூங்காவில் மக்களோடு மக்களாக தினமும் நடைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அப்போது மு.க.ஸ்டாலின் மக்களுடன் சகஜமாக உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதே போன்று மு.க.ஸ்டாலினுடைய செயல்பாடுகளுக்கு மக்கள் நேரடியாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் மு.க.ஸ்டாலின் நேற்று நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிரே வந்த ஒருவர் ‘ நீங்கள் கொரோனா தடுப்பூசியை 5 கோடி மக்களுக்கு விரைவில் போட்டுள்ளீர்கள். இதனால்தான் தைரியமாக வெளியே நடமாட முடிகிறது. இதனை அப்படியே கடைபிடித்து தமிழ்நாடு இந்தியாவில் மட்டும் அல்ல வெளியேயும் முதல் இடத்துக்கு கொண்டு வருவதை யாராலும் தடுக்க முடியாது. உங்களுடைய உடல்நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினார்.
பெண்மணி ஒருவர், ‘உங்களை நினைத்தால் எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. இதே மாதிரி எப்பவும் இருங்கள். உங்கள் சேவை நல்லபடியாக இருக்கிறது.’ என்று மனதார பாராட்டினார். அதற்கு மு.க.ஸ்டாலின் சிரித்தபடி கட்டாயம் என்று கூறினார்.
இதே போன்று நடைபயிற்சியில் ஈடுபட்டவர்கள் மு.க.ஸ்டாலினிடம், உங்களுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்று தங்களது பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். அதற்கு நன்றி என்று சிரித்த முகத்துடன் கூறியபடி நடைபயிற்சியை தொடர்ந்தார்.