இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முழுமையாக விலகவில்லை. ஆனாலும், மக்கள் முகக்கவசம் அணிந்து செல்வது வெகுவாகக் குறைந்துவிட்டது.
கொரோனா கட்டுப்பாட்டு வழிகளைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அரசின் நிதி ஆயோக்கின் சுகாதாரக்குழு உறுப்பினர் மருத்துவர் வி.கே.பால் கூறுகையில், ‘இந்தியாவில் மக்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவதும், முகக்கவசத்தின் பயன்பாடும் வெகுவாகக் குறைந்துவிட்டது. இது கொரோனா 2-வது அலைக்கு முன்பிருந்த நிலைக்குச் சென்றுவிட்டது. இப்படியே சென்றால் நாம் மீண்டும் ஆபத்தான கட்டத்துக்குள் சென்றுவிடுவோம்.
கொரோனா வைரஸிலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் பாதுகாப்பு மிகக் குறைவானதுதான். இன்னும் ஆபத்தான கட்டத்தைக் கடக்கவில்லை. ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில்தான் இருந்து வருகிறோம். ஆதலால், இரு தடுப்பூசிகளும், முகக்கவசமும், சமூக விலகலும் மிகவும் அவசியம். உலகின் சூழலை அறிந்து மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும்’ எனத் தெரிவித்தார்.
மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் லாவ் அகர்வால் கூறுகையில், ‘தடுப்பூசி செலுத்தும் அளவு அதிகரித்தவுடன், மக்களிடையே பாதுகாப்பு முறைகள் குறைந்து வருகின்றன என்பதை உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது எனத் தெரிவித்தார்.