• Wed. May 1st, 2024

ராம நாமமே உலகின் மூல மந்திரம் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் பேச்சு

ByN.Ravi

Apr 18, 2024

ராம நாமமே உலகின் மூல மந்திரம் என்று ஆன்மீக சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் பேசினார்.

இது பற்றிய விவரம் வருமாறு.

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில் ஸ்ரீ ராம நவமியை முன்னிட்டு மதுரை எஸ் எஸ் காலனி எஸ்.எம். கே. திருமண மண்டபத்தில் ஆன்மீக சொற்பொழிவாளர் இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் அவர்களின் கம்ப ராமாயண தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இன்று அவர் மூல மந்திரம் என்ற தலைப்பில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது.

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை கற்றுத் தருவது தான் ராமாயணம். இது இரண்டு யுகங்களுக்கு முன்பு நடந்திருந்தாலும் இன்றும் ஸ்ரீராமனின் வாழ்க்கை நமக்கு உதவியாக இருக்கின்றது.

இன்பம் வரும்போது துள்ளி குதிக்காதவன் துன்பம் வரும்போதும் ஒருபோதும் துவள மாட்டான் என்பது குறள். அதற்கு இலக்கணமாக ஸ்ரீராமன் திகழ்ந்தான். முதல் நாள் மாலை அழைத்து நீதான் இந்த தேசத்தின் சக்கரவர்த்தி என்று சொன்ன போதும், இது என் கடமை என்று மகிழ்ச்சி அடையவில்லை. மறுநாள் காலை, இன்று உனக்கு பட்டாபிஷேகம் கிடையாது. 14 ஆண்டுகள் கானகம் சென்று தவம் செய்வாயாக என சொன்ன போதும் வருத்தம் அடையவில்லை. ஸ்ரீராமனின் திருமுகம் அப்போது பூத்த தாமரை மலர் போல் இருந்ததாம். அத்தகைய தன்மையை நமக்கு வாழ்வியல் பாடமாக தருகின்றான் ஸ்ரீராமன். அறிவு, உணர்ச்சி இரண்டையும் ஒரே நோக்கில் கொண்டு பயணப்படுபவனே சிறந்த தலைவனாகின்றான். கானகத்திலே முதலிலே குகன் என்னும் அன்பானவனை சந்திக்கின்றான். ஸ்ரீராமன் அன்பு என்பதற்கு சிறந்த அடையாளம் குகன். ஸ்ரீராமன் குகனை தாயினும் நல்லான் என்கிறான். ஆழமான பக்தியை வெளிக்காட்ட ஆழமான கங்கையிலிருந்து மீனையும் அவன் அன்பின் உயர்வை காட்ட உயர்ந்த மலையிலிருந்து கிடைத்த தேனையும் ராமனுக்கு படைக்கின்றான் குகன்.

இறைவனுக்கு நாம் படைக்க வேண்டியவை அன்பும் அதனை சார்ந்த பக்தியும் ஆகும்.

தாய் கையேகி தனக்கு வரமாக நாட்டைப் பெற்றிருந்தாலும், அதனை வெறுத்து ஒதுக்கி தன் அண்ணனை தேடி கானகம் வந்து தேசத்தை ஏற்றுக் கொண்டு எங்களை வழி நடத்துவாயாக எனச் சொல்லும் தம்பியான பரதன், தனக்கு உரிமை இல்லாதது கிடைத்தாலும் நாம் ஏற்கக் கூடாது என்ற செய்தியையும் விட்டுக் கொடுப்பதே வெற்றி என்ற செய்தியையும் நம் இதயத்திலே பதிய வைக்கின்றாள்.

கானகத்தில் உள்ள தவசீலர்களை நோக்கி, தானே வந்து அருள் காட்சி தருகிறான் ஸ்ரீராமன்.

நாம் நம் கடமையை சரிவர செய்தால் இறைவனே நம்மை தேடி வருவான் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் ரிஷிகளும் சபரியும். அனுமன் என்னும் அறிவாளியை, ஆண்மையாளனை சந்திக்கின்றான் ஸ்ரீராமன். இவனால்தான் ராமாயணம் என்னும் தேர் இனிமேல் ஓட போகின்றது என்கிறான் ஸ்ரீராமன். சுக்ரீவனின் நட்பும் பெற்று அவனை வாழ வைப்பதற்காக அதர்மத்தின் துணையைத் தேடிய வாலியை வதம் செய்கின்றான் ஸ்ரீராமன்.

பின்னர் வாலியே உணர்ந்து ஸ்ரீ ராமனை தொழுது இராம நாமமே உலகின் மூல மந்திரம் எனச் சொல்லி ஸ்ரீ ராமனே கடவுள் என்று தன் மகன் அங்கதனிடம் சொல்வதின் மூலம் ஸ்ரீராமனை உணர்ந்த வாலி வீடுபேறு பெற்றான் என்பதே இராமாயணம் ஆகும் .

இவ்வாறு இலக்கிய மேகம் ஸ்ரீனிவாசன் பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார். இன்று அவர் பாதம் சூட்டினான் என்ற தலைப்பில் எஸ்.எஸ். காலனி எஸ்.எம்.கே. திருமண மண்டபத்தில் பேசுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *