உசிலம்பட்டி அருகே மீனாட்சிபுரம், சொக்கநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ள ஒச்சம்மாள் மற்றும் கருப்பசாமி கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே என்.மீனாட்சிபுரம், என்.சொக்கநாதபுரம் கிராமத்தில் கரிசல்குளம் வகையாறாவிற்கு பாத்தியப்பட்ட பழமை வாய்ந்த ஒச்சம்மாள் மற்றும் கருப்பசாமி திருக்கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் புதிய கட்டமைப்பு மற்றும் 21 அடியில் ஒச்சம்மாள் சுவாமிக்கு கோபுரத்துடன் கூடிய கோவில் மற்றும் கருப்பசாமிக்கு தனிப்பீடத்துடன் கூடிய கோவில் அமைக்கப்பட்டு இன்று கும்பாபிஷேக விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக கணபதி யாக பூஜையுடன் மூன்று கால யாக பூஜைகளை சிவாச்சாரியார்கள் நடத்தி காலை 8 மணிக்கும் கடம் புறப்பாடாகி கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.
கும்பாபிஷேகம் முடித்ததும் மாபெரும் அன்னதானம் விழாக் கமிட்டியினரால் வழங்கப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் மீனாட்சிபுரம், சொக்கநாதபுரம், மூப்பபட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள இந்த வகையாறாவிற்கு பாத்தியப்பட்ட மக்களும், நல்லுத்தேவன்பட்டி, லிங்கநாயக்கன்பட்டி மற்றும் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.