தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சியினர் கடைசி கட்ட தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
பிரச்சாரத்துக்கு கடைசி நாளான இன்று காலை முதலே அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் விறுவிறுப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி, அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் உள்ளிட்ட அனைத்து பிரசார நிகழ்ச்சிகளும், வாக்குப்பதிவு நடைபெறும் 48 மணி நேரத்துக்கு முன்னதாக முடித்துக் கொள்ள வேண்டும் என்பதால், தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.