தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டியது குறித்த திருத்தப்பட்ட வழிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உச்சத்தில் இருக்கும்போது தினசரி ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வரும் நிலையில் பரிசோதனையும் குறைக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் இருந்தே முழுமையாக ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளும் மாநிலமாக தமிழக அரசு இருந்து வருகிறது.
இந்திய அளவில் கொரோனா தினசரி பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளதால், வழிகாட்டு நெறிமுறைகளை எளிதாக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா பரிசோதனையை குறைக்க உத்தரவிட்டுள்ளது.தமிழக சுகாதாரத்துறை சார்பில் வெளியிட்டுள்ள வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தேவையற்ற பரிசோதனைகளை தவிர்க்க வேண்டும். சளி, காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு திணறல் அறிகுறி உள்ளோருக்கு மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா பாசிட்டிவ் நபருடன் தொடர்புடைய 60 வயதிற்கு மேட்பட்டோருக்கு சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுககு சுழற்சி முறையில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.