ஆந்திர மாநில பிரிவினைக்கு பின் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சந்திரபாபுநாயுடு விஜயவாடா அருகில் உள்ள அமராவதியை மாநிலத்தின் நகர் என்று அறிவித்தார். தொடர்ந்து அமராவதியை மாநிலத் தலைநகருக்கு ஏற்ற வகையில் மாற்றி அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றன.
அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தின் வளர்ச்சியை பரவலாக்கும் வகையில் ஆந்திராவிற்கு மூன்று தலை நகரங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.அவற்றில் நிர்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்,சட்டமன்ற தலைநகராக அமராவதி, நீதித்துறை தலைநகராக கர்னூல் ஆகியவை இருக்கும் என்று அறிவித்து அரசாணை வெளியிட்டார்.
அதனையடுத்து, ஆந்திர அரசின் முடிவை எதிர்த்து ஹைதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் மத்திய அரசும் பிரதிவாதியாக சேர்க்கப்பட்டது.அப்போது நீதிமன்றத்தில் பதில் அளித்த மத்திய அரசு ஒரு மாநிலத்திற்கு தலைநகரம் அமைக்கும் முடிவு என்பது முழுக்க முழுக்க அந்த மாநில அரசு தொடர்புடையது. எனவே இதற்கும் மத்திய அரசுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று கூறிவிட்டது.
இந்த வழக்கில் பதில் மனுதாரர் ஆகிய ஆந்திர மாநில அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் ஆந்திராவுக்கு ஒரே ஒரு தலைநகராக அமராவதி மட்டுமே இருக்கும். இது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சட்டமன்றத்தில் வெளியிடுவார் என்று கூறி உள்ளது.