கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி மிகுந்த உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.

இந்த நிலையில், நாளை (மே 4) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
கோவை தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில், 10 தொகுதிகளில் பதிவான வாக்குகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு நாளை காலை 8 மணி முதலே வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு, வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது.

மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அனுமதி பெற்றவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்கள் வருகைக்கு தேவையான ஏற்பாடுகளும் முழுமையாக செய்யப்பட்டுள்ளன. ஒழுங்குமுறையுடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற அதிகாரிகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை முடிவுகள், கோவை மாவட்ட அரசியல் நிலவரத்தில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.




