தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறும் நிலையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல்களையும் அந்தந்த கட்சியினர் வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .
இந்நிலையில் சுயேட்சை வேட்பாளர்களும் அதிகளவில் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகின்றனர். மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர்கள் அதிகளவில் வேட்புமனுத்தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சி 78 வது வார்டில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிடும் எம்.பி.ஏ பட்டதாரி மதுமிதா கண்ணகி தோற்றத்தில் கையில் காற்சிலம்புடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். தொடர்ந்து மக்களை ஏமாற்றி வரும் வேட்பாளர்களை நம்பி நம்பி மக்கள் வாக்களித்து வருவதை உணர்த்தும் வகையிலும், தொடர்ந்து மாற்றத்தை வேண்டியும் வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக வேட்பாளர் மதுமிதா தெரிவித்தார்.