தஞ்சையில் நடந்த கொள்ளை வழக்கில், விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் காவல்நிலையத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
தஞ்சை சீத்தா நகரில் கடந்த 10 ஆம் தேதி 6 பவுன் நகை மற்றும் 7 லட்சம் ரொக்கம் கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக சென்னையை சேர்ந்த அப்துல் மஜீத், தஞ்சையை சேர்ந்த சூர்யா, சீர்காழியை சேர்ந்த சத்தியவாணன் ஆகிய மூன்று பேரையும் தஞ்சை மேற்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டபோது சீர்காழியைச் சேர்ந்த சத்யவாணன் என்பவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக தஞ்சை சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் போது சத்தியவாணன் நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதால் உடனடியாக அவரை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார் என காவல்துறையினர் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அவருடைய உறவினர்களும் அப்பகுதி மக்களும் சத்யவாணன் மரணத்தில் மர்மம் நீடித்து வருவதாகவும், முறையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.