• Fri. Apr 26th, 2024

மாணவர்களின் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வேண்டும் – எடப்பாடி பழனிசாமி அறிக்கை

Byமதி

Nov 18, 2021

கொரோனா பாதிப்பு குறைந்து கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டதால் அனைத்து தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என்று கல்லூரிகள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை காமராஜர் பல்கலை கழகம், அமெரிக்கன் கல்லூரி, யாதவர் கல்லூரி, மன்னர் திருமலை கல்லூரி, மதுரைக்கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்லூரியிலிருந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரையில் போராட்டம் நடத்திய 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் 300 மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். மதுரை மட்டுமில்லாமல் தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் போராடிய மாணவர்களை கைது செய்திருக்கிறது காவல்துறை.

எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மாணவர்களை கைதினை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக சுமார் 20 மாதங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. தமிழ்நாட்டில் கல்லூரிகள் திறந்து வைத்து இரண்டரை மாதங்கள் ஆனதாலும், முழுமையாக நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், பண்டிகை காலம்,bபருவ மழை என்று விடுமுறை அளிக்கப்படுவதாலும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்கு உரிய பாடங்களை ஆசிரியர்கள் முழுமையாக முடிக்கவில்லை என்றும், எனவே செமஸ்டர் தேர்வுக்கு முன் நடத்தப்படும் மாதிரி தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

தற்போது தமிழகம் முழுவதும் இரண்டு டோஸ்கள் போடப்பட்டு வருகிறது.பலர் இரண்டு டோஸ்களும் போடாமல் இருக்கின்றனர். செமஸ்டருக்கான சிலபஸை ஆசிரியர்களும் முடிக்கவில்லை என்று பல்வேறு செய்தித்தாள்களில் செய்திகள் வருகின்றது. கடந்த இரண்டு,மூன்று நாட்களில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆன்லைன் தேர்வுகள் வேண்டும் என்று போராடிய மாணவர்களை கைது செய்து இருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் கோரிக்கையானா ஆன்லைன் தேர்வை அரசு நடத்த வேண்டும். மாணவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *