தேர்தல் பரப்புரையில் கூட்டணி கட்சியின் தொண்டர்கள் கலந்து கொள்ளாததால் சிறார்கள் கையில் கட்சி கொடிகளை கொடுத்து பிடிக்க வைத்து தேர்தல் பரப்புரை மேற்கொண்ட வேட்பாளர்!
தேர்தல் பரப்புரைகளை தீவிரப்படுத்தி உள்ளது அரசியல் கட்சிகள். ஆனால் கடந்த கால தேர்தல்களை போன்று இந்த முறை தேர்தல் களத்தில் அரசியல் கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் என யாரும் பெரிய அளவில் ஆர்வம் காட்டாததால் வேட்பாளர்களும், நட்சத்திர பேச்சாளர்களும் சிறிய கூட்டத்துக்கு மத்தியிலே பெயரளவில் தங்களுடைய பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட ஒரு சில இடத்தில் மட்டுமே தங்கள் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு சென்று விடுகின்றார்கள். பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் தேவநாதன் சிவகங்கை அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே பரப்புரை மேற்கொண்டார். அப்போது அங்கே கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள் பெரிய அளவில் யாரும் கலந்து கொள்ளவில்லை. அந்தக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் கொடியை தவிர்த்து வேறு கொடிகள் எதுவும் தொண்டர்கள் மத்தியில் இல்லாததால் பிரச்சாரத்துக்கு வரும் வேட்பாளரின் வாகனத்தை பின்தொடர்ந்து வரும் வாகனத்தில் கூட்டணி கட்சியின் கொடிகளை எடுத்து வந்து அந்த கூட்டத்தில் நிற்கும் சிறார்கள் கையில் அந்த கொடிகளை கொடுத்து பிடிக்க வைக்கிறார்கள். அரசியல் களத்தில் பரப்புரை வழக்கத்துக்கு மாறாக கட்சித் தொண்டர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதையே இது காட்டுகின்றது.