• Sun. May 5th, 2024

தைப்பூசம் : திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்..!

Byவிஷா

Jan 25, 2024

இன்று தைப்பூசத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இன்று தை மாத பௌர்ணமி மற்றும் தைப்பூச திருவிழாவான இன்று முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் மற்றும் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, காலை 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
காலை 7.30 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடி, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைப்பெற்ற நிலையில், இன்று காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெறும் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி உள்ளார். அங்கும் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சிஅளிக்கிறார்.
தைப்பூச தினத்தில் முருகனை தரிசனம் செய்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் திருச்செந்தூருக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாதயாத்திரையாக கோவிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *