• Tue. Apr 22nd, 2025

தமிழகத்தில் இன்று வெப்பநிலை அதிகரிக்கும்

Byவிஷா

Apr 14, 2025

தமிழகத்தில் இன்று வழக்கத்தை விட 7டிகிரி ஃபாரன்ஹீட் அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது..,
கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று (ஏப்.14) இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை சில இடங்களில் வழக்கத்தைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 102 டிகிரி, 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கும். தமிழகத்தில் ஏப். 13-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக வேலூர், சிவகங்கை மாவட்டம் திருபுவனம், மதுரை மாவட்டம் மேலூர், கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணை ஆகிய இடங்களில் 3 செ.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டி, தேன்கனிக்கோட்டை, மதுரை மாவட்டம் பெரியபட்டி, மதுரை மாவட்டம் தானியமங்கலம் 2 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.