• Mon. Apr 21st, 2025

முதியோர்களுக்கு முக்கிய அறிவிப்பு: தமிழகத்தில் நாளை முதல் வெப்பம் அதிகரிக்கும்!

ByP.Kavitha Kumar

Feb 20, 2025

தமிழகத்தில் நாளை முதல் (பிப்ரவரி 21) முதல் பிப்ரவரி 23-ம் தேதி வரை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் அளவு கூடிவருகிறது. அதிகாலையில் பனிக்காற்று வீசினாலும், இரவில் வெப்பத்தின் அளவு குறையாமல் உள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை வானிலை மையம், தமிழகத்தில் மூன்று நாட்கள் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” இன்று (பிப்ரவரி 2) தமிழகம், புதுச்சேரிமற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும்.

மேலும் பிப்ரவரி 21-ம் தேதி முதல் பிப்ரவரி 23-ம் தேதி வரை: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரிமுதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். பிப்ரவரி 24 மற்றும் பிப்ரவரி 25-ம் தேதிகளில்: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.