• Sun. Apr 28th, 2024

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்..!

Byவிஷா

Oct 9, 2023

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் இன்று (அக்டோபர் 9) தொடங்குகிறது.
கடந்த மார்ச் 20ஆம் தேதி முதல் ஏப்ரல் 21வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. இதையடுத்து அக்டோபர் 9ந்தேதி கூடும் என சபாநாயகர் அப்பாவு சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, இன்றைய பேரவைக் கூட்டம் முடிந்ததும், எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். அதன்படி, இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. இன்றைய பேரவைக் கூட்டம் முடிந்ததும் சபாநயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்று கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். இந்த கூட்டத் தொடரில் 2023-24-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும்.
2024 நாடாளுமன்ற தேர்தல், சாதி வாரி கணக்கெடுப்பு என பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்த கூட்டத் தொடர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால், அரசின் சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று சபை தொடங்கியதும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் லியாவுதீன் சேட், கே. பழனியம்மாள், வெ.அ. ஆண்டமுத்து மற்றும் பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம், கேரள மாநில முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, வேளாண் அறிவியலாளர் எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட இருக்கிறது.
அதைத்தொடர்ந்து, கூட்டம் தொடங்கியதும் காவிரி நீரை திறந்துவிட கர்நாடகத்தையும் மத்திய அரசையும் வலியுறுத்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வரவுள்ளார். அந்தத் தீர்மானம் எதிர்க்கட்சியான அதிமுக உள்பட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்படவுள்ளது.மேலும், நடப்பு நிதியாண்டுக்கான கூடுதல் செலவினம் தொடர்பான மானிய கோரிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிமுகம் செய்யவுள்ளார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் 110-ஆவது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிடவுள்ளார். காவிரி பிரச்னை, தகுதி அடிப்படையில் மகளிர் உரிமைத் தொகை, ஆசிரியர்கள், மருத்துவர்கள் போராட்டம், சொத்துவரி உயர்வு, ஆவின் நிறுவன விவகாரம், டாஸ்மாக் பிரச்னை, சட்டம்-ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பத் திட்டமிட்டுள்ளன.
அதிமுக தரப்பில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கை விவகாரமும் எழுப்பப்படவுள்ளது. இந்த விவகாரங்களுக்கு பதில் அளிக்க தொடர்புடைய அமைச்சர்களும் தயாராக இருப்பதாகவும், இதனால் பேரவை கூட்டத்தொடர் பரபரப்பை ஏற்படுத்தும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *