• Tue. May 7th, 2024

நிலை மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவிப்பு…

BySeenu

Mar 5, 2024

நிலை மின் கட்டணத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் பலகட்ட போராட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்ற ஆலோசனை கூட்டம் கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள கோ-இந்தியா வளாகத்தில் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு அவர்களது கருத்துக்களை தெரிவித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக நிலை மின் கட்டணம் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தின் நிறைவில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நிலை மின் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டண குறைப்புகளை அரசு அறிவிக்கவில்லையென்றால், தேர்தலுக்கு முன்பு ஒரு கூட்டம் நடத்தி பெரும்பான்மையான அமைப்புகள் என்ன முடிவு எடுக்கிறதோ அதை கேட்பது அல்லது 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவது என இரண்டில் ஒரு முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தொழில்துறையினர், எங்களுடைய நிலை மின் கட்டணம் சம்பந்தமான பிரச்சனைக்கு அரசு இது நாள்வரை செவிசாய்க்கவில்லை எனவும், இந்நிலையில் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் எங்களுடைய பிரதான பிரச்சனையான நிலை மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பு தமிழக அரசு எங்களுடைய இந்த கோரிக்கையை புறக்கணிக்கும் பட்சத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பிரதிநிதிகளை அழைத்து தேர்தல் புறக்கணிப்பு சம்பந்தமாகவும் அல்லது 40 தொகுதிகளிலும் தொழில் முனைவோர்களை வேட்பாளர்களாக நிறுத்துவது சம்பந்தமாகவும் ஒரு கூட்டம் நடத்தி அதில் முடிவெடுக்க இருப்பதாக தெரிவித்தார். மேலும் எங்களுடைய ஐந்தாம் கட்ட போராட்டத்தின் பொழுது அரசு தங்களை அழைத்து பேசி எங்களுடைய 50 சதவிகித கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்த அவர், இன்னும் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் முக்கியமாக நிலை மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார். 430 சதவிகிதம் பயன்படுத்தப்படாத மின்சாரத்திற்கு மாதம்தோறும் கட்டணம் வசூலிப்பது சரி இல்லை என்று அமைச்சர்களே ஒப்புக் கொண்டிருந்தாலும் மின்சார வாரியத்தின் தலைமை அதிகாரி ராஜேஷ் லகானி தமிழ்நாட்டில் உள்ள குறு சிறு தொழில்களை கண்டாலே வெறுப்பது போல் அதனை ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *