மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில், இலவச வீட்டு மனை பட்டா வழங்கியும் நிலத்தை அடையாளம் காட்டாத வருவாய்த்துறையைக் கண்டித்து, அப்பகுதி பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

100 நாள் வேலை திட்டம் 100 நபர்களுக்கு வழங்க வேண்டும் 100 நாள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தலையில் தகர சட்டி, மண்வெட்டி சுமந்தபடி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளின் ஆட்சிக் காலங்களிலும், வறுமைக் கோட்டிற்குப் கீழ் வாழும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. குறிப்பாக, வாடிப்பட்டி தாலுகாவுக்கு உட்பட்ட விராலிப்பட்டி, கச்சைக்கட்டி, செம்மினிபட்டி மற்றும் பூச்சம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டுப் பல ஆண்டுகள் ஆகின்றன.
பட்டாக்கள் கையில் இருந்தபோதிலும், அதற்கான நிலத்தை அரசு அதிகாரிகளால் இதுவரை ஒதுக்கீடு செய்து தரப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசு புறம்போக்கு மற்றும் நத்தம் புறம்போக்கு நிலங்களை வருவாய்த்துறை சர்வேயர்கள் மூலமாக முறையாக அளவீடு (Survey) செய்யவில்லை.

நிலத்தைக் கையகப்படுத்தி மக்களிடம் ஒப்படைப்பதில் வருவாய்த்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். பட்டா மட்டும் கொடுத்துவிட்டு நிலத்தைக் காட்டாமல் எங்களை அலைக்கழிப்பது நியாயமல்ல.

தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, நிலங்களை ஆய்வு செய்து எங்களுக்குச் உரிமையுள்ள வீட்டுமனைகளை ஒப்படைக்க வேண்டும். தவறினால், அனைத்துக் கிராம மக்களையும் திரட்டி மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்





