கூடலூர் மற்றும் மசினகுடி பகுதியில் 4 பேரை அடித்துக்கொன்ற புலியை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்தனர். புலியை சுட்டுப் பிடிக்க உத்திரவு கொடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்ப, முடிந்த வரை புலியை உயிருடன் பிடிக்க வனத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்தது.
இதற்காக கண்காணிப்பு கேமராக்கள், பறக்கும் கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு கூண்டுகள் அமைத்தும் எந்த முயற்சியும் வனத்துறையினருக்கு பலன் அளிக்கவில்லை. சிப்பிபாறை நாய், கும்கி யானை என எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளும் கைகொடுக்கவில்லை.
இந்நிலையில், கூடலூர் முதல் மசினகுடி வரை அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் புலி நடமாட்டம் பதிவாகவில்லை என்பதால் புலி சென்ற இடத்தையும் அவர்களால் அடையாளம் காண முடியவில்லை. இதனால் அதனை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே புலிக்கு ஏற்கனவே காயம் இருந்ததால் உயிரிழந்திருக்கலாம் என கருதும் வனத்துறையினர் 16ஆவது நாளாக அதனை தேடி வருகின்றனர். தற்போது புதர்கள் நிறைந்த பகுதிகள், நீர்நிலைகளை ஒட்டிய இடங்களில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. ஒருவேளை புலி மீண்டும் வெளியே வந்தால் தாக்கக்கூடும் என்பதால் வனத்துறையினர் கவனமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.