சுப்மன் கில்லை துணை கேப்டனாக்கியது நியாயமே இல்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின்
முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்துக்கு
எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுப்மன் கில் இந்திய அணியில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது-
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறுகையில், தனது யூடியூப் பக்கத்தில், சுப்மன் கில்லை திடீரென துணை கேப்டன் என்று சொல்கிறார்கள். 6, 35, 16, 4 என்பது அவருடைய கடைசி இன்னிங்ஸ்களின் ஸ்கோராகும். பெரிய அணிகளுக்கு எதிராக அவர் பெரியளவில் அசத்தியதில்லை. அப்படிப்பட்ட நிலையில் அவரைத் துணைக் கேப்டனாக நியமிக்க வேண்டிய காரணம் என்ன?
நல்லவேளை ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஞ்சு சாம்சன் பாவம் இன்னும் எவ்வளவு ரன்கள் தான் அடிப்பார்? என்ன இது பைத்தியக்காரத்தனமா இருக்கு. சாம்சன் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் இருந்து சாய் சுதர்சன் இருக்கிறார். அதே போல இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கொடுக்கலாம். சஞ்சு சாம்சனை நான் விக்கெட் கீப்பராக அல்லாமல் பேட்ஸ்மேனாகவே தேர்வு செய்ய ஆதரவு கொடுப்பேன். கில் என்ன செய்தாலும் ஆதரவு கொடுக்கிறீர்கள். ஆனால் சாம்சன், சுதர்சன், இசான் கிசான், நிதிஷ் ரெட்டி போன்ற வீரர்களுக்கு ஏன் வாய்ப்பு கொடுக்கவில்லை?
ஆஸ்திரேலிய மண்ணில் நிதிஷ்குமார் ரெட்டி சிறப்பாக விளையாடியதால் ஹீரோ போல காண்பித்தீர்கள். தற்போது இத்தொடரில் தகுதி இருந்தும் அவரை தேர்வு செய்யாத நீங்கள் திடீரென கீழே தள்ளியுள்ளீர்கள். கில்லுக்கு இவ்வளவு ஆதரவு அளித்து துணை கேப்டன் ஆக்கியது நியாயமே இல்லை. ஸ்குவாடில் பும்ரா இருக்கும்போது அவர்தான் அந்த பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.