• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு, பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம்

ByP.Thangapandi

Sep 28, 2024

உசிலம்பட்டி அருகே புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு மழை வேண்டி – 1000 அடி உயர பாறையில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வில்லாணி கிராமத்தை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரின் அடிவார பாறையான வண்ணாத்திபாறையில் அமைந்துள்ளது பழமைவாய்ந்த பெருமாள் திருக்கோவில்.

தரைமட்டத்திலிருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த இந்த பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையில் மழை வேண்டி சுமார் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து நன்கொடையாக நிதி திரட்டி, விழா எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து அன்னதானம் வழங்கப்படுவது வழக்கம்., அவ்வாறு விழா முடிந்ததும் மாலை நேரத்தில் மழை பெய்து சுற்றியுள்ள கிராமங்கள் செழிக்கும் என்பது இம்மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இந்த ஆண்டும் இன்று புரட்டாசி மாத இரண்டாம் சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரம் அடி உயரத்தில் உள்ள பாறையில் அமைந்துள்ள இந்த பெருமாள் கோவிலில் பெருமாள் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஆதி வழக்கப்படி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்விற்காக சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், திமுக சார்பில் ஒன்றிய செயலாளர்கள் அஜித்பாண்டி, முருகன் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் இளமகிழன் உள்பட உசிலம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள வில்லாணி, வி.பெருமாள்பட்டி, ஒத்தப்பட்டி, பண்ணைப்பட்டி, மூப்பபட்டி, மாதரை, நக்கலப்பட்டி மற்றும் நல்லமாபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாறை மீது ஏறி சென்று சாமி தரிசனம் செய்து அன்னதானத்தில் உணவருந்தி சென்றனர்.