மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புதிய பேருந்து நிலைய கட்டமைப்பு மற்றும் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. பேருந்து நிலைய விரிவாக்க பணிக்காக ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான சுமார் 1 ஏக்கர் நிலத்தை நகராட்சி நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்க நகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாக தலைமை செயலர்கள் உத்தரவிட்டு ஒரு ஏக்கரை கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த ஒரு ஏக்கரில் சுமார் 140 வணிக வளாக கடைகளையும் கையகப்படுத்தி, இடித்துவிட்டு பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்து கட்டமைப்பு பணிகளை செய்து அரசால் அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கடைகளின் உரிமையாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூழலில் இந்த 140 கடைகளின் உரிமையாளர்களுக்கு ஆதரவாக உசிலம்பட்டி வர்த்தக சங்கத்தினரும் இணைந்து கவண ஈர்ப்பு போராட்டமாக இன்று முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உசிலம்பட்டி நகைகடை பஜார், ஜவுளிகடை பஜார், சந்தை கடைகள், தேனி ரோடு, பேரையூர் ரோடு, மதுரை ரோடு மற்றும் வத்தலக்குண்டு ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.