தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வரும் சமந்தா அவ்வப்போது கணவருடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் கலக்கி வருகிறார். தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரண்டு படங்களிலும் இவர் தனது படப்பிடிப்பையும் முடித்துக் கொடுத்துவிட்டார்
தற்போது 11 ஆண்டுகள் தொடர்ச்சியாக நடித்து வருவதால், சில காலம் நடிப்பிலிருந்து ஓய்வெடுக்க சமந்தா முடிவு செய்துள்ளார். இதனை சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘தி பேமிலி மேன் 2’ தொடர் வெளியாவதற்கு முன்பு சர்ச்சையானதாகவும், ஆனால், தொடர் வெளியானவுடன் சர்ச்சைகள் அடங்கிவிட்டதாகவும் அந்தப் பேட்டியில் சமந்தா குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி, அந்தத் தொடர் தொடர்பாக இன்னும் மனதில் கசப்பைப் பிடித்துக் கொண்டிருப்பவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் சமந்தா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் சமந்தாவுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. ஆனால் தற்போது நடிப்பில் இருந்து அவர் ஓய்வெடுப்பதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.