• Fri. Mar 29th, 2024

கோவையில் கதறும் கரைவேட்டிகள்..!

Byவிஷா

Feb 21, 2022

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், டெல்லியே அலறுமளவுக்கு கோவையின் கூத்துகள் அரங்கேயிருப்பதுதான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆமாம். இந்தியாவிலேயே இதுவரையில் இல்லாத அளவுக்கு பணம் விளையாடியுள்ளது அங்கே! என்கிறார்கள். அட ஒரு சட்டமன்ற பொதுத்தேர்தலில் இவ்வளவு பணம் விளையாடியிருந்தாலும் ஒரு கெத்து இருக்கும். ஆனால் வார்டு எலெக்ஷனுக்காக இப்படி வாரி இறைத்துள்ளார்களே என்று மக்கள் ஆதங்கப்படும் நிலையும் அங்கு நிலவி வருகிறது. மாநகராட்சியின் ஒரு வார்டில் ஒரு ஓட்டுக்கு பத்தாயிரம் வரையில் கூட கொடுக்கப்பட்டதாக உளவுத்துறை போலீஸ் சொல்கிறது. இதுமட்டுமல்லாமல், சில இடங்களில் கையில் நூறு நூற்றைம்பது வாக்குகளை வைத்திருப்போருக்கு ஆப்பிள் போன் வாங்கிக் கொடுத்த கூத்தும் நடந்துள்ளது.
இதனால் ‘எனக்கான மரியாத போச்சேடா உங்களால’ என்று விவேக் லெவலில் புலம்பிக் கண்ணீர் வடிக்கிறது சட்டமன்ற தேர்தல்! என்று நெட்டிசன்கள் வெச்சு கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள் மீம்ஸில்.
ஒட்டு மொத்தமாக கோவை மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் பதவிகளுக்காக போட்டியிட்ட முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் செய்த செலவை கூட்டிப்பார்த்தால் தமிழ்நாட்டில் மினி பட்ஜெட்டே போட்டுவிடலாம்! என்கிறார்கள். அரசியல் பார்வையாளர்கள். ஆனால் அதேவேளையில், வாக்குபதிவு நாளன்று இந்த காஸ்ட்லி வேட்பாளர்களுக்கு ரிவிட் வைத்துவிட்டனராம் வாக்காளர்கள். அதாவது கோயமுத்தூர் மாநகராட்சியில் மொத்தம் பதினைந்து லட்சத்து அறுபத்தைந்தாயிரத்து நூற்று ஐம்பத்து எட்டு வாக்காளர்கள் உள்ளனராம். இவர்களில் வாக்களித்தோர் வெறும் எட்டு லட்சத்து முப்பத்தொன்பதாயிரத்து நூற்று ஒன்பது பேர்தானாம். அதாவது 54 சதவீதம் கூட வாக்குபதிவு நடக்கவில்லை. ஓட்டுப்போட வராதோரில் பெண்களின் சதவீதமும் குறைவுதானாம்!
இதனால், மிக கடுமையான மன கவலையில் உள்ளனராம் காசை அள்ளி வீசிய வேட்பாளர்கள். ஏனென்றால் பெண்கள்தான் பணம் வாங்கினா, நன்றியோடு ஓட்டு போடுவார்கள் என்று அவர்களுக்கு பணமும், பரிசுப் பொருட்களும் அள்ளி அள்ளி தந்தனராம் இந்த முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள். அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் பல லட்சங்கள் செலவாம். ஆனால் இப்படி வாக்குப்பதிவு மந்தமாகி, அதிலும் பெண்கள் குறைவாகவே வாக்குப்பதிவுக்கு வந்ததால் மிரண்டு கிடக்கின்றனர். எனவே பெரிய அளவு வித்தியாசத்தில் வெற்றியோ தோல்வியோ இருக்கப்போவதில்லை. இழுத்துப் பிடித்து ஒன்றிரண்டு, பத்துப் பதினைந்து வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி தோல்வி இருக்கும். எனவே அத்தனை பேருக்கும் உயிர் போய்தான் திரும்பும்! என்கிறார்கள்.
கெத்தாக காசை அள்ளி வீசிய வேட்பாளர்களை நோக்கி ‘என்ன சோனமுத்தா! மனசுக்குள்ளே கவலை ரிங்ங்ங்ங்ன்னு சுத்துதா?’ என்று வடிவேலு ஸ்டைலில் கிண்டலடிக்கின்றனர் மற்ற ஏழை வேட்பாளர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *