நெல்லை டவுன் மாதா கோவில் நடுத்தெருவைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம், இவருடைய மகள் ரம்யா, இவர் பேட்டை கோடீஸ்வரன் நகர் 3வது தெருவைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான ஆனந்தராஜ் என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால், இருவரும் நேற்று ராமையன்பட்டியில் உள்ள பிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டு , பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இந்த தகவல் கிடைத்து காவல்நிலையத்திற்கு வந்த ரம்யாவின் தந்தை கல்யாணசுந்தரம், தாய் செல்வி, அண்ணன் ராம்குமார் மற்றும் உறவினர்கள், ரம்யாவை சமாதானம் செய்து தங்களுடன் அழைத்துச் செல்ல முயன்றுள்ளனர்.
ஆனால் ரம்யாவோ காதலனுடன் தான் செல்வேன் என பிடிவாதமாக மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரம்யாவின் அண்ணன் ராம்குமார் கத்தியால் ரம்யாவை சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் வயிற்றில் கத்துக்குத்து பாய்ந்து படுகாயம் அடைந்த ரம்யா, உயிருக்கு போராடியுள்ளார். அதேபோல் ராம்குமாரை தடுக்க முயன்ற ஆனந்தராஜின் கையிலும் கத்திக்குத்து விழுந்ததுள்ளது. உடனே ரம்யா, ஆனந்தராஜ் ஆகிய 2 பேரையும் போலீசார் மீட்டு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பேட்டை போலீசார் ராம்குமார், கல்யாணசுந்தரம், ராம்குமாரின் தம்பி விமல் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைந்தனர்.