மதுரையில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் சவர்மா கடைகளுக்கு சீல் வைக்கப்படும். மதுரையில் நடைபெற்ற சவர்மா கடை உரிமையாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜெயராம் பாண்டியன் எச்சரிக்கை.
சவர்மா சாப்பிடுவதால் பாதிப்பு ஏற்பட்டு வருவதன் எதிரொலியால், மதுரை மாவட்ட சவர்மா கடை உரிமையாளர்களுடன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம். சமீப நாட்களாக சவர்மா சாப்பிடுவதால் உடல் பாதிப்பு ஏற்பட்டு வரும் நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக மதுரையில் 52 சவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்,அப்போது காலாவதியான 10 கிலோ சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது, 5 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து சவர்மா கடை உரிமையாளர்களுடன் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் முனிச்சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் வைத்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர். மதுரை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராம் பாண்டியன் தலைமையில் ஆலோசனை நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் காலாவதியான சிக்கனை பயன்படுத்தக் கூடாது, தயாரித்த உணவுகளை குளிர்சாதன சேமிப்பு கிடங்கில் வைக்க கூடாது, சிக்கனில் வர்ணங்கள் சேர்க்க கூடாது போன்ற பல்வேறு உணவு பாதுகாப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கினர். அப்போது பேசிய மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜெயராம் பாண்டியன் தொடர்ந்து விதிமுறையை மீறும் சவர்மா கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரித்துள்ளார்.