• Fri. Mar 29th, 2024

லட்சக்கணக்கான மக்களுக்கு ருத்ராட்ச தீட்சை வழங்கிய சத்குரு

கோவை ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான மக்களுக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு, ருத்ராட்ச தீட்சை வழங்கினார். ஆதியோகி முன்பு நேற்று முன்தினம் நடந்த இந்நிகழ்ச்சியில், ருத்ராட்சத்தின் முக்கியத்துவம் குறித்து சத்குரு பேசும்போது,”ருத்ராட்ச விதைகள் இயற்கையாகவே தனித்துவமான அதிர்வுகளை கொண்டது.

இந்த அதிர்வுகள் ஒரு மனிதர் தன் சக்தியை ஒருங்கமைத்து, அதை உறுதிப்படுத்த உதவுகிறது. இந்த சக்தி உங்களுக்கு ஒரு பாதுகாப்பு கவசம் போல செயல்படும். வெளியில் இருந்து வரக்கூடிய பலவிதமான பாதிப்புகளில் இருந்து உங்களை காக்கும். நீங்கள் உங்கள் செயலை ஆற்றல் வாய்ந்த முறையில் செய்ய உதவியாக இருக்கும். ருத்ராட்சங்களில் ஒரு முகத்தில் இருந்து 14 முகம் வரை உள்ளது. ஆதியோகி ருத்ராட்ச தீட்சையில் உங்களுக்கு பஞ்சமுகி எனப்படும் ஐந்து முக ருத்ராட்சத்தை அளித்துள்ளோம்.

12 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சண்முகி எனப்படும் 6 முக ருத்ராட்சத்தை பயன்படுத்தலாம்” என்றார். முன்னதாக, ருத்ராட்சம் குறித்த பல்வேறு விதமான சந்தேகங்கள், முறையாக பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன. இந்நிகழ்ச்சி தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும், ஸ்பானிஷ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன், மாண்ட்ரின் ஆகிய வெளிநாட்டு மொழிகளிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *