மேட்டுப்பாளையத்திலிருந்து சிறுமுகை செல்லும் சாலையில் வீராசாமி நகர் உள்ளது. இங்கு உள்ள ஒரு குடியிருப்பு பகுதிக்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.
இந்த சாலையின் நடுவே நீண்டு வளர்ந்த பனைமரம் ஒன்று கான்கிரீட் சாலை அமைக்க இடையூறாக இருந்தது. போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் பனைமரத்தை வெட்டிவிடலாம் என்று ஒரு சாரர் கூறி வந்த நிலையில் தமிழகத்தின் மாநில மரமாக அறிவிக்கப்பட்டுள்ள பனைமரத்தின் முக்கியத்துவம் கருதி அப்பகுதி பொதுமக்கள் பனைமரத்தை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெவித்தனர்.
இதனால் பனைமரத்தை அகற்றாமல் அப்படியே கான்கிரீட் சாலை அமைக்கும்படி ஒப்பந்ததாரரிடம் கேட்டுக் கொண்டனர். இதையடுத்து பனைமரத்தை வெட்டாமலேயே கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.பெரிய வாகனங்கள் செல்ல சாலையின் நடுவில் உள்ள பனை மரம் இடையூராக இருந்தாலும் தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்தை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து வாழ்வளித்த அப்பகுதி மக்களை இயற்கை ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.