கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலில் சசிதரூர் எம்.பி.யும் போட்டியிடுகிறார். தொண்டர்களுக்கு தேர்தல் அறிக்கையும் வெளியிட்டார். இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டால் கட்சியை சீர்படுத்தவும், வெற்றிக்கோட்டை நோக்கி அழைத்து செல்லவும் என்னென்ன செய்வேன் எனவும் குறிப்பிட்டு இருந்தார். அதோடு அந்த வாக்குறுதி பட்டியலில் இந்திய வரைபடமும் இடம் பெற்றிருந்தது. அந்த வரைபடத்தில் ஜம்மு-காஷ்மீரின் சில பகுதிகள் மற்றும் லடாக் பகுதிகள் இடம் பெறவில்லை. இந்த வரைபடம் வெளியானதும், அதனை பாரதிய ஜனதா கட்சியினர் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்தனர். . இதனை அறிந்த சசிதரூர், தனது தேர்தல் அறிக்கையில் இருந்த தவறான இந்திய வரைபடத்தை உடனே நீக்கிவிட்டார். மேலும் தவறான பதிவு வெளியிட்டதற்காக அவர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு கொண்டார்.